சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 3 ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ளது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் விசாரணையில் உள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான முன்னேற்பாடுகள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அதன்படி வாக்காளர்கள் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. மேலும், மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.
அதைதொடர்ந்து தமிழக காவல்துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் போலீசாரை வரும் 15ம் தேதிக்குள் பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்று அனைத்து காவல் துறை ஐஜிக்கள், டிஐஜிக்கள், அனைத்து மாநகர கமிஷனர்கள் மற்றும் அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை தமிழக டிஜிபி திரிபாதி அனுப்பி உள்ளார். அதன்படி உயர் போலீசார் தங்களது அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதியில் பணியிடமாற்றம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.