*ஏராளமானோர் பங்கேற்பு
மேலூர் : மேலூர் அருகே நடந்த கோயில் திருவிழாவில் 100 ஆடுகள் பலியிட்டு கமகம கறி விருந்து பரிமாறப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலூர் அருகே சூரக்குண்டு கிராமத்தில் உள்ளது சின்னடக்கி, பெரியடக்கி அம்மன் மற்றும் ஆண்டியரசு மகன் கோயில்கள். இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு திருவிழா கடந்த வாரம் கோயிலில் ஆடு ஒன்றை பலி கொடுத்ததுடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி இரவில் ஊர் நடுவே உள்ள மந்தை கோயில் முன்பு பெண்கள் கும்மி கொட்டி பாடல்கள் பாடினர்.
8 நாட்கள் கடும் விரதம் இருந்த கிராமமக்கள் நேற்று ஊர் மந்தையில் உள்ள மந்தை சாமி கோயில் முன்பு கூடினர். பின்னர் அங்கிருந்து அம்பலகாரர்கள் சுப்பிரமணியன், பெரியசாமி என்ற துரைப்பாண்டியன், பாண்டி, அய்யாவு, அழகர்சாமி முன் செல்ல இவர்களை தொடர்ந்து ஊர்வலமாக பெண்கள் பொங்கல் பானைகள், மாவிளக்கு எடுத்தும், ஆண்கள் நேர்த்திக்கடன் செலுத்த 100க்கும் மேற்பட்ட ஆடுகளுடன் கோயிலுக்கு சென்றனர். தொடர்ந்து கோயில் முன்பு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். பின்னர் ஆடுகள் பலி கொடுக்கப்பட்டு அனைவருக்கும் கமகம கறி விருந்து பரிமாறப்பட்டது.