பெரம்பூர்: புளியந்தோப்பு பகுதியில் விசாரணைக்கு அழைத்த எஸ்ஐயை கத்தியால் குத்திய பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். அவரது கூட்டாளிகள் 2 பேரை தேடி வருகின்றனர். புளியந்தோப்பு காவல் நிலைய எஸ்ஐ கோபால் (52), நேற்று காலை கன்னிகாபுரம் ஜோசப் தெருவில் ரோந்து சென்றபோது, சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினார். அப்போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.இதனால், அவர்களை காவல் நிலையம் வரும்படி எஸ்ஐ கோபால் அழைத்தார். அப்போது, அவர்களில் ஒருவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, திடீரென எஸ்ஐ கோபாலை குத்தினார். சுதாரித்துக்கொண்ட அவர், லாவகமாக தப்பினார். இதனால், மீண்டும் கத்தியால் கையில் குத்தினர். காயமடைந்த அவரை கீழே தள்ளிவிட்டு அவர்கள் தப்பி சென்றனர்.
அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, எஸ்ஐ கோபாலை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் விசாரணையில், வில்லிவாக்கத்தை சேர்ந்த ஜங்கிலி கணேசன் (34) என்பவர், எஸ்ஐயை கத்தியால் குத்தியது தெரிந்தது. அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள தினேஷ் மற்றும் கார்த்திக் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர். ஜங்கிலி கணேஷ் மீது 3 கொலை வழக்கு, 7 கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இவர் 8 முறை குண்டர் சட்டத்தில் சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.