சென்னை: துரைப்பாக்கத்தில் தொழிலதிபரின் வீட்டு பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 60 சவரன் நகை மற்றும் 15.5 லட்சத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர். துரைப்பாக்கம், ராஜ் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் அயன்பாண்டி (76), தொழிலதிபர். இவரது 2 மகன்களும் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர். அய்யன்பாண்டி தனது வீட்டில் தனது 2 மருமகள் மற்றும் மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் வீட்டை பூட்டிவிட்டு, அயன்பாண்டி தனது குடும்பத்துடன் காரில் வெளியே சென்றார். பின்னர் இரவு 11.30 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது முன்பக்க கிரில் கேட் மற்றும் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை பார்த்து அய்யன்பாண்டி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அனைவரும் உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கையறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த பொருட்கள் மற்றும் துணிமணிகள் வெளியே சிதறி கிடந்தன. மேலும், பீரோ லாக்கரை உடைத்து அதில் இருந்த 60 சவரன் நகை, 15.5 லட்சத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றதும் தெரிய வந்தது. இதுகுறித்து துரைப்பாக்கம் போலீசில் அயன்பாண்டி புகார் அளித்தார். அதன்பேரில், அடையாறு துணை கமிஷனர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தனர். மேலும் ைகரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் மர்ம கும்பல் குறித்து தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.