சென்னை: பொறியியல் படிக்கும் மாணவர்கள் பகவத் கீதையை கட்டாயம் படிக்க வேண்டிய அவசியமில்லை என்று திருப்பதியில் தமிழக அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று காலை தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களைப் வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசிர்வாதம் செய்து வைத்தனர். பின்னர் அவர் அளித்த பேட்டி: அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் 32 பாடப்பிரிவுகளை புதிதாக கொண்டு வந்தது. இதில் 12 பாடப்பிரிவுகளை தமிழக அரசு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு பரிந்துரை செய்தது.
அதில் ஒன்று பகவத்கீதை. ஆனால், பெரும்பாலானோர் கேட்டு கொண்டதற்கிணங்க பகவத் கீதை கட்டாயப் பாடமாக இல்லாமல் விருப்பப்பாடமாக தேர்வு செய்துகொள்ளும் விதமாக பல்கலைக்கழகத்திற்கு அரசு பரிந்துரை செய்துள்ளது.
நீட் தேர்வு முறைகேடு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து இதுவரை தெரியாத நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.