இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் ஐந்து மாதங்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவுக்கு கடந்த மாதம் துபாயில் நடந்த ஆசிய கோப்பை தொடரின் போது முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. அதன் பின்னர் தற்காலிக சிகிச்சை மேற்கொண்டு அணிக்கு திரும்பினார். இருந்த போதிலும், முதுகுவலியால் தொடர்ந்து அவதியுற்று வருகிறார். இதனால், தென்னாப்பிரிக்கா தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார்.
முதுகு வலி பற்றி அறிந்துகொள்ள அவர் லண்டன் சென்று ஏற்கனவே சிகிச்சை பெற்ற டாக்டரிடம் ஆலோசனை பெற உள்ளார். இதனால் தென்னாப்பிரிக்க தொடர் முடிந்த பிறகு நடக்க இருக்கும் வங்கதேச தொடரிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. முதுகு வலிக்கு அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டால் சுமார் 5 மாதங்கள் விளையாட முடியாது என்றும், லண்டன் டாக்டரிடம் ஆலோசனை பெற்று திரும்பிய பிறகே முழு விவரம் தெரியவரும் என்றும் பி.சி.சி.ஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.