டெல்லி: தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு பிரதமர் மோடி வருகை புரிகிறார். சபர்மதி ஆசிரமத்துக்கு செல்லும் அவர், மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்துகிறார். அங்கிருந்து சபர்மதி ஆற்றங்கரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதில் இந்தியாவை திறந்தவெளி கழிப்பிடமில்லா நாடாக பிரதமர் அறிவிக்கிறார்.
இதற்கிடையே, மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். முன்னதாக, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, பாஜக செயல் தலைவர் ஜெ.பி.நட்டா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உள்ளிட்ட தலைவர்களும் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
குடியரசுத் தலைவர் வாழ்த்து:
மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் இன்று கொண்டாப்பட்டு வருகிறது. மகாத்மாவின் தீர்க்கதரிசனம் மற்றும் செயல்கள் ஒவ்வொரு இந்திய குடிமக்களின் தனிப்பட்ட மற்றும் கூட்டு வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். சத்தியமும் அகிம்சையும் மகாத்மா காந்தி உலகளாவிய மனித குலத்திற்கு வழங்கிய நன்கொடை என்றும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
லால் பகதூர் சாஸ்திரி நினைவிடத்தில் மரியாதை:
முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளையடுத்து விஜய்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.