×

குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்திய வழக்கு பட்டறை உரிமையாளர்களுக்கு 4 லட்சம் அபராதம் விதிப்பு: செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: குழந்தை தொழிலாளர்களை சட்டவிரோதமாக வைத்து வேலை வாங்கிய நகை பட்டறை உரிமையாளர்களுக்கு 4 லட்சம் அபராதம் விதித்து சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஏழுகிணறு பகுதியில் இயங்கி வரும் தங்க நகை செய்யும் பட்டறைகளில் வடமாநில சிறுவர்கள் பலர், சட்ட விரோதமாக வேலை செய்து வருவதாக புகார் வந்தது. அதன்பேரில், சென்னை மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழு  செயலாளர் ஜெயந்தி, போலீசார் உதவியுடன், அங்குள்ள பட்டறைகளில் சோதனை மோற்கொண்டார். அப்போது 60 பேர் குழந்தை தொழிலாளர்களாக வேலை செய்து வருவது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அனைவரும் மீட்கப்பட்டு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர், இது தொடர்பாக நகை பட்டறை உரிமையாளர்கள் கணேஷ் கர், சஹிப் ஷேக், கவுதம் மைதி மற்றும் சமீன் ஜனா ஆகியோரை கைது செய்து சிறையில்  அடைத்தனர்.

பின்னர் நீதிபதி ஜெயந்தி, மீட்கப்பட்ட வடமாநில குழந்தை தொழிலாளர்களை ரயில் மூலம் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைத்தார். இந்த நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த 4 பேரும், ஜாமீன் கோரி சென்னை மாவட்ட  முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.  இந்த மனு மாவட்ட முதன்மை நீதிபதி செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் கூறுகையில், நகை பட்டறைகளில் வேலை செய்வது குழந்தை தொழில்  கொடுமையின் கீழ் வராது. இது திறமைக்கான தொழில். இதில் வேலை செய்தால் பயிற்சி பெற்று, சொந்தமாக தொழில் செய்யலாம், என்று  தெரிவித்தனர்.

அப்போது, சட்டபணிகள் ஆணை குழு, மீட்கப்பட்ட சிறுவர்களை  சொந்த ஊருக்கு அனுப்பி உறவினர்களிடம் ஒப்படைத்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி 4 பேருக்கும் 10 ஆயிரம் பினைத்தொகையுடன் நிபந்தனை ஜாமீன் வழங்கினர். மேலும் தலா ஒரு லட்சம் என 4 பேரும் 4 லட்சம் செலுத்த உத்தரவிட்டார். அதன்படி 4 லட்சத்தை சென்னை மாவட்ட சட்டபணிகள்  ஆணைய குழுவில் நகை பட்டறை உரிமையாளர்கள் செலுத்தினர்.

Tags : Sessions court ,child laborers ,workshop owners ,employers , Child Workers, Fines, Sessions Court
× RELATED சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிறார் செந்தில் பாலாஜி