சென்னை: தமிழக ஊடகங்களில் பணி புரியும் பெண் பத்திரிக்கையாளர்கள் மீது சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளை பரப்பி வந்த கிஷோர் கே.சாமி என்பவர் சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் தீவிர ஆதரவாளரான கிஷோர் கே.சாமி தங்களை மிகவும் கண்ணியக்குறைவான வார்த்தைகள், மற்றும் கருத்துகளால் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார் என்பது தமிழ்நாடு பெண் பத்திரிக்கையாளர் மையத்தின் குற்றச்சாட்டு.
இது தொடர்பாக கடந்த ஜுன் மாதம் சென்னை போலீஸ் கமிஷ்னர் ஏ.கே.விஸ்வநாதனிடம் பெண் பத்திரிக்கையாளர்கள் சிலர் புகார் அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் கிஷோர் கே.சாமி கைது செய்யப்பட்டுள்ளார். கிஷோர் கே.சாமியை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
வலதுசாரி சிந்தனையாளரும், வலைதள செயற்பாட்டாளருமான கிஷோர் கே.சாமி சென்னையை சேர்ந்தவர். இவர் தமிழகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ இயக்கங்களின் தலைவர்கள் மீது ஆதாரமற்ற முறைகளில் குற்றச்சாட்டுகளை சமூக வலைதளத்தில் பதிவு செய்து வந்தார் என்பதும் இவர் மீதான குற்றச்சாட்டு.