பந்தலூர்: பந்தலூர் அருகே சேரம்பாடி வனச்சரகத்திற்குட்பட்ட சந்தனமகுன்னு ஆதிவாசி காலனியில் எட்டு ஆதிவாசி குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு முறையான குடியிருப்புகள் இல்லாமல் கூரைகளுக்கு தார்பாய் போட்டு மூங்கில்களை கொண்டு வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இரவு நேரங்களில் அடிக்கடி இப்பகுதிக்குள் காட்டு யானைகள் புகுந்து குடியிருப்புகளை சேதம் செய்து வருவதால் ஆதிவாசி மக்கள் இரவு ஏழு மணிக்கெல்லாம் இரவு உணவை முடித்துக்கொண்டு அருகில் உள்ள அரசு பள்ளியில் தங்கி விட்டு காலையில் வீடுகளுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் புகுந்த காட்டு யானை மாதி என்பவரின் வீட்டை உடைத்து சேதப்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற சேரம்பாடி வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட நிர்வாகம் இப்பகுதி ஆதிவாசி மக்களுக்கு முறையான வீடுகளை கட்டிதர நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆதிவாசி மக்கள் வலியுறுத்துகின்றனர்.