கறம்பக்குடி: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடைபெற்றது. குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராணி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அதிமுக எம்எல்ஏ நார்த்தாமலை ஆறுமுகம், கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு பொருட்களை வழங்கி மேடையில் பேச துவங்கினார். அப்போது புதுக்கோட்டை விடுதியை சேர்ந்த பாப்பாப்பட்டி ஊராட்சி செயலாளர் முருகேசன், மருதன்கோன்விடுதியை சேர்ந்த அதிமுக கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் சாகுல் ஆகிய இருவருக்கும் மேடையில் பேசுவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது சிலர் சேர்களையும் தூக்கி வீசினர்.
நிகழ்ச்சியில் திடீரென அடிதடி சத்தம் கேட்டதால் கர்ப்பிணிகள் அலறியடித்து ஓட துவங்கினர். இதை பார்த்த எம்எல்ஏ ஆறுமுகம் மேடையை விட்டு இறங்கி வந்து தகராறில் ஈடுபட்ட இருவரையும் சமாதானம் செய்து அமர வைத்தார். அரசு விழா என்று கூறி தங்களை அழைத்து வந்து இழிவுபடுத்தி விட்டதாக கர்ப்பிணிகள் வருத்தம் தெரிவித்து சென்றனர்.