வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு கிராம நிர்வாக அலுவலகத்தில் உதிரும் ஒடுகளால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் வத்தலக்குண்டு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் வத்தலக்குண்டு பேரூராட்சி அலுவலகம் எதிர்புறம் உள்ளது, பாழடைந்த ஓட்டுக்கட்டிடத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் ஓடுகள் பாதிக்கு மேல் உதிர்ந்து போய் உள்ளது. மழை மற்றும் வெயில் தாக்காமல் இருக்க ஓடு விழுந்த பகுதியில் திருவிழா கடை போல தார்ப்பாய் கட்டியுள்ளனர்.
அலுவலகம் முன்புறமும், பின்புறமும் முட்செடிகள் புதராக வளர்ந்துள்ளதால் விஷ ஜந்துக்கள் காணப்படுகின்றன. முன்புற சாக்கடை மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. மழைக்காலங்களில் முக்கிய ஆவணங்கள் சேதமாகின்றன. தீபாவளி இலவச வேஷ்டி சேலைகள் இங்கு வைக்கப்படும்போது சேதமடைகிறது. எனவே காலதாமதமின்றி பழைய கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் சட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் பாக்கியராஜ் கூறும்போது, ‘ தமிழ்நாட்டில் மோசமான நிலையிலுள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் இதுதான். ஓடு அவ்வப்போது விழுகிறது. ஹெல்மெட் போட்டுதான் அலுவலகத்தில் செல்லும் நிலை உள்ளது. போர்க்கால அடிப்படையில் பழைய கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்’ என்றார்.