சென்னை: இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் அக்டோபர் 1-ம் தேதி தேசிய தன்னார்வ ரத்த தான தினம் கொண்டாடப்படுகிறது. ரத்த தான தினம் நாளை அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் நாள் தேசிய தன்னார்வ தினம் அனுசரிக்கப்படுவதாகக் கூறியுள்ளார். ரத்தம் உயிரின் நாடி என்பதால், ரத்த தானம் செய்வது விலைமதிப்பற்ற மனித உயிரை காப்பாற்றும் புனிதமான செயல் என்றும் கூறினார்.
ஒவ்வொருவரும் தானமாக வழங்கும் ஒரு அலகு ரத்தம், 4 கூறுகளாக பிரிக்கப்பட்டு 4 உயிர்களை காக்க உதவுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். தன்னார்வ ரத்தக் கொடையாளர்களால், ரத்த சேமிப்பில் நாட்டிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாகத் அவர் தெரிவித்துள்ளார். எனவே, நடப்பாண்டில் தன்னார்வ ரத்த தானத்தில் தமிழகம் 100% இலக்கை எட்ட பெருமளவில் ரத்த தானம் வழங்கிட முன்வருமாறு முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.