சென்னை: தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டுமே கடந்த ஒரு வாரத்திற்குள் 3 குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதுதவிர தமிழகம் முழுவதும் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சென்னையில் முக்கிய அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற பிரத்யேக வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், நேற்று இரவு சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் காய்ச்சல் வார்டை ஆய்வு செய்தார். அப்போது, அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகளிடம் நலம் விசாரித்த அவர் மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.