×

நிதி ஆயோக் முன்னாள் சிஇஓ-வை விசாரிக்க சிபிஐக்கு மத்திய அரசு அனுமதி : ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் புது திருப்பம்

சென்னை: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், நிதி ஆயோக் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சிந்துஸ்ரீ குல்லார் உள்ளிட்ட 4 அதிகாரிகளிடம் விசாரணை நடத்துவதற்கு சிபிஐ அமைப்புக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் இந்த வழக்கின் விசாரணை சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 2007ம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் 305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெற்றது. இந்த நிதியைப் பெறுவதற்காக, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.  இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சிபிஐ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் சிபிஐ அதிகாரிகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்று நீதிமன்றத்தில் அதிகாரிகள் முறையிட்டனர். ஆனால், ஆவணங்கள் எதுவும் இன்றி இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருவதாகவும், கைது செய்த பிறகுதான் ஆவணங்களை தேடுவதாகவும் சிதம்பரம் தரப்பினர் குற்றம்சாட்டியிருந்தனர். ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளது. அவர்கள், சிதம்பரத்தை கைது செய்ய இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையில் சிதம்பரம் ஜாமீன் கேட்டு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை முடிந்து, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இந்த வழக்கில் அவரது மகன் கார்த்தி சிதம்பரம், ஏற்கனவே கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார்.
இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் நிதி ஆயோக் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சிந்துஸ்ரீ குல்லார், சிறு, குறு நிறுவனங்கள் துறை முன்னாள் செயலாளர் அனூப் கே புஜாரி, நிதித் துறை அமைச்சகத்தின் முன்னாள் இயக்குநர் பிரபோத் சக்ஸேனா,  பொருளாதார விவகாரங்கள் துறை முன்னாள் துணைச் செயலர் ரவீந்திர பிரசாத் ஆகியோரிடம் விசாரிக்க அனுமதிக்க கோரி  சிபிஐ மத்திய அரசிடம் அனுமதி கோரியது.

சிந்துஸ்ரீ குல்லார், கடந்த 2004ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை பொருளாதார விவகாரங்கள் துறை கூடுதல் செயலராக பதவி வகித்தார். அனூப் கே புஜாரி, 2006-2010 காலகட்டத்தில் இதே அமைச்சகத்தின் இணைச் செயலராகவும், பிரமோத் சக்ஸேனா 2008-2010 காலகட்டத்தில் நிதி அமைச்சகத்தின் இயக்குநராகவும் பதவி வகித்தனர்.இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவன வழக்கில் நிதி ஆயோக் முன்னாள்  தலைமை செயல் அதிகாரி சிந்துஸ்ரீ குல்லாரிடம் விசாரணை நடத்த சிபிஐக்கு மத்திய அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. சிபிஐ விசாரணை வளையத்திற்குள் மத்திய நிதித்துறையின் முன்னாள் அதிகாரிகள் சிக்கியுள்ள நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு மேலும் சூடுபிடித்துள்ளது. இது ப.சிதம்பரத்திற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Tags : government ,CBI ,ex-CEO ,CEO ,Aayog , ,CBI , investigate Central government ex-CEO
× RELATED திமுகவினரின் தொலைபேசிகள் ஒட்டுக்...