சென்னை: வரும் கல்வியாண்டு முதல் மருத்துவக்கலந்தாய்வில் கைரேகை பதிவு சோதிக்கப்படும் என்று மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயணபாபு கூறினார். கோவை பிஎஸ்ஜி மருத்துவ கல்லுாரியில், முதலாம் ஆண்டு சேர்ந்த ஒரு மாணவி, ஒரு மாணவரின் புகைப்படம் வேறுபட்டு இருப்பதாக புகார் வந்தது. விசாரணையில் புகைப்படங்கள், ஆவணங்கள் சரியாக உள்ளது தெரியவந்தது. இதுதொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு கூறியதாவது:
விசாரணையில், எல்லா ஆவணங்களும் சரியாக இருப்பதாக அதிகாரிகள் குழு தெரிவித்தது. இதுபோன்ற பிரச்னைகளை தடுக்க வரும் கல்வியாண்டு முதல் பயோமெட்ரிக் பதிவேடு முறையை அமல்படுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். புகைப்படங்களில் சிறு மாறுதல்கள் இருப்பதால் சந்தேகம் எழுந்தது. சான்றிதழ், புகைப்படம் சரிபார்ப்பதுடன் இனி வரும் ஆண்டுகளில் கைரேகையும் சரிபார்க்கப்படும். இந்த இரு மாணவர்களும் ஆவணங்கள் சரியாக உள்ளதாக கல்லூரிக்கு தகவல் தெரிவிக்கப்படும். இருவரும் தங்களின் மருத்துவ படிப்பை தொடரலாம். எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் 2017ம் ஆண்டு முதல் நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்ந்த மாணவர்களின் ஆவணங்களை சரிபார்த்தால், அதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும்.