சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் டாப் கிரண்ட் செக்யூரிட்டி சர்வீஸ் என்ற தனியார் பாதுகாப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தை ஓய்வு பெற்ற உதவி கமிஷனர் ரகுராம் நடத்தி வருகிறார். நிறுவனத்தின் சார்பில் பிரபல நடிகர், நடிகைகள் மற்றும் முக்கிய பிரமுர்கள், சுப நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்புக்கு ஆட்களை அனுப்பி வருகின்றனர். அதன்படி, நடிகர் ஜெயம்ரவிக்கு இந்த நிறுவனத்தில் இருந்து 3 மாதங்களுக்கு முன்பு மாதம் 35 ஆயிரம் ஊதியம் என்ற அடிப்படையில் 2 பாதுகாவலர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் கடந்த 2 மாதங்களாக பேசியபடி பாதுகாப்பு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வில்லை. இதற்கிடையே ஜெயம்ரவிக்கு பாதுகாப்பு பணியில் இருந்த 2 ஊழியர்களும் பாதுகாப்பு நிறுவனத்தில் இருந்து விலகி விட்டனர். பிறகு ஒரு வாரம் கழித்து நடிகர் ஜெயம் ரவியிடம் பாதுகாவலர்களாக சேர்ந்து கொண்டனர்.
இந்நிலையில் நடிகர் ஜெயம்ரவியின் உதவியாளர் சேஷாகிரி மீது தனியார் பாதுகாப்பு நிறுவனம் சார்பில் மேலாளர் வின்சென்ட் என்பவர், எங்கள் நிறுவனத்திற்கு ஊதிய பாக்கி 70 ஆயிரம் கொடுக்காமல் எங்களுடைய ஆட்களையே வேலைக்கு அமர்த்தி உள்ளதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நடிகர் ஜெயம்ரவியின் உதவியாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.