×

திருவள்ளூர் அருகே பூஜை செய்தபோது பயங்கரம் மர்ம பொருள் வெடித்து சிதறியதில் சாமியார் பலி: உயிர் தப்பிய பெண் ஓட்டம்,..போலீஸ் தீவிர விசாரணை

சென்னை: திருவள்ளூர் அருகே வீட்டில் பூஜை செய்தபோது மர்ம பொருள் வெடித்து சிதறியதில் சாமியார் இறந்தார். அவருடன் பூஜையில் இருந்த பெண் உயிர் தப்பினார். சாமியார் குண்டு வெடித்து இறந்தாரா அல்லது சாமியாருடன் அந்த பெண் எதற்காக தங்கினார் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.சென்னை நங்கநல்லூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (52). இவர், கடந்த 15 வருடத்துக்கு முன் திருவள்ளூர் அருகே எறையாமங்கலம் கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி வீடு கட்டினார். இந்த வீட்டில் தங்கி சித்த வைத்தியம், ஜோதிடம் பார்த்துள்ளார். மந்திர வித்தைகளும் கற்று வைத்திருந்ததுடன் பில்லி, சூனியம் நீக்க பூஜைகளும் செய்துள்ளார். இதனால், அவரை பார்க்க தினமும் ஏராளமான மக்கள் வந்து சென்றனர். சாமியார் கோவிந்தராஜுக்கு திருமணம் ஆகவில்லை. இவரது தாய், சென்னை நங்கநல்லூரில் வசிக்கிறார். எறையாமங்கலத்தில் சாமியார் இருந்தாலும் சென்னை நங்கநல்லூரில் கோவிந்தராஜை குருவாக ஏற்றுக்கொண்டவர்கள் தற்போதும் அவர் சொல்லும் பணிகளை செய்து வந்துள்ளனர்.

இதனால் சென்னையில் இருந்தும் ஏராளமானோர் சாமியாரை அடிக்கடி பார்க்க வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திருவள்ளூர் அருகே எறையாமங்கலம் வீட்டில் சாமியார் கோவிந்தராஜ் பூஜை செய்தபோது திடீரென குண்டு வெடிப்பதுபோல் பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இதனால் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது சாமியார் கோவிந்தராஜ் படுகாயங்களுடன் வெளியில் தடுமாறி வந்துள்ளார். அவருடன் இருந்த ஒரு பெண்ணும் ஓடிவந்தார். தகவலறிந்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சாமியார் கோவிந்தராஜை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கோவிந்தராஜ் பரிதாபமாக இறந்தார். எனவே அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், சாமியார் கோவிந்தராஜ் தங்கியிருந்த வீட்டு பத்திரத்தை சில தினங்களுக்கு முன்பு சென்னை நங்கநல்லூரில் உள்ள தாயிடம் கொடுத்துவிட்டு வந்துள்ளார். கடந்த சனிக்கிழமை சென்னை பெசன்ட் நகரை சேர்ந்த லாவண்யா என்ற பெண், சாமியார் வீட்டில் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு சாமியார் பூஜை செய்தபோது திடீரென ஒரு மர்ம பொருள் வெடித்து சிதறியதில் அவரது உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு இறந்தது தெரியவந்துள்ளது. எனவே, பூஜையின்போது வெடித்தது வெடிகுண்டா, வேறு ஏதாவது சதியா அல்லது சாமியாருடன் பெண் எதற்காக தங்கினார் என்று போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர். மேலும் தடய அறிவியல் துறை துணை இயக்குனர் நளினி மற்றும் அதிகாரிகள் சாமியார் வீட்டுக்கு சென்று ஆய்வு செய்தனர். மர்ம பொருள் வெடித்து சாமியார் பலியானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Thiruvallur Terrorist ,pooja , Thiruvallur, Mystery Explosion, Samyar Kills, Woman
× RELATED வேதாள முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்