சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் உயர்கல்வித்துறை தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே .பி.அன்பழகன், அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்திக்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுவது குறித்தும், பகவத் கீதை சர்ச்சை குறித்து விவாதிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இன்ஸ்டிடியூட் ஆப் எமினென்ஸ் அதாவது அண்ணா பல்கலைக்கழகத்திக்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான ஒப்புதல் மத்திய அரசிடம் நிலுவையில் வைத்துள்ளது. அதற்கு காரணம் தமிழக அரசின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. அதுசார்ந்த விஷயங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இந்த அந்தஸ்து கிடைத்தால், நிதி பங்களிப்பானது 50% மத்திய அரசும் 50% மாநில அரசும் கொடுக்க வேண்டும் என்ற விதி உள்ளது.
இது தொடர்பான ஆலோசனைதான் தற்போது நடைபெற்று வருகிறது. அதைத்தவிர, நேற்றையதினம் அண்ணா பலக்லைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் பகவத் கீதையை உள்ளடக்கிய தத்துவவியல் பாடமும், அதில் சேர்க்கப்பட்டிருப்பது சார்ந்த விஷயங்களும் விவாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 20 கல்வி நிறுவனங்கள் உயர் சிறப்பு அந்தஸ்து விருதுக்காக தேர்வு செய்யப்படும். அந்த கல்வி நிறுவங்களுக்கு முழு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும். மேலும் அந்த நிறுவனங்கள் உலக தரவரிசையில் 100 இடங்களுக்குள் வருவதை அவர்களின் நோக்கமாக வைத்து பணியாற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 20 கல்வி நிறுவனங்களில் 10 அரசு பல்கலைக்கழகங்களும், 10 தனியார் பல்கலைக்கழகங்களும் தேர்வு செய்யப்படும். இந்தாண்டு தமிழகத்தில் சென்னை ஐஐடி தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.