×

உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்குவது எப்படி?: வழிகாட்டி அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேட்பாளர்களுக்கு எப்படி சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, விரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு  வருகிறது.  இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்காக வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு, வரன்முறை, சின்னங்களை பங்கிட்டு அளித்தல் ெதாடர்பான அரசாணையை நேற்று மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் கூறி  இருப்பதாவது:உள்ளாட்சி தேர்தல் என்பது தமிழகத்தில் உள்ள அனைத்து சிற்றூராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி, பேரூராட்சி, மூன்றாம் நிலை நகராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றை உள்ளடக்கியது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள்,  பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ள சின்னங்களின் அடிப்படையில் அந்த கட்சியின் வேட்பாளர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடலாம்.

கட்சியில் இல்லாமல் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள் அந்த தேர்தலுக்கான அங்கீகரிக்கப்பட்ட தனி சின்னங்களில் போட்டியிட வேண்டும். சுயேட்சை வேட்பாளர் கேட்ட ஒரே சின்னத்தை ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கேட்டால்  குலுக்கல் முறையில் சின்னங்கள் வழங்கப்படும். இந்த தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படாவிட்டால், அந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தை வேறு வேட்பாளருக்கு ஒதுக்க கூடாது. பிற மாநிலங்கள்  அல்லது யூனியன் பிரதேசங்களில் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியினால் நிறுத்தப்படும் வேட்பாளர்களுக்கு சலுகை அடிப்படையில் சின்னங்கள் ஒதுக்கப்படும்.அதேபோல், ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்து, தற்போது அங்கீகரிக்கப்படாத தேசிய அல்லது மாநில கட்சியால் நிறுத்தப்படும் வேட்பாளர்களுக்கு விதிமுறையின்படி சலுகை அடிப்படையில் சின்னம் ஒதுக்கப்படும். அதன்படி பதிவு  செய்யப்பட்ட - அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் வேட்பாளருக்கு முதலில் சின்னம் ஒதுக்கப்பட்டு, அதற்கடுத்த வரிசையில் சுயேச்சை வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்கப்படும்.

கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர், சம்பந்தப்பட்ட கட்சியிடம் இருந்து முறையான ஒப்புதல் படிவத்தை பூர்த்தி செய்து தாக்கல் செய்ய வேண்டும். ஒரு அரசியல் கட்சியின் சிறு பிரிவோ அல்லது போட்டி பிரிவோ ஒரு சின்னத்துக்கு உரிமை  கோரினால் அதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்தால், அக்கட்சிகளிடம் இருந்து கடிதம் பெறப்பட்டு மாநில ஆணையத்தின்  அறிவுறுத்தல்படி சின்னம் ஒதுக்கப்படும்.
சின்னம் ஒதுக்கீடு செய்வது ெதாடர்பாக, மாநில தேர்தல் ஆணையத்தின் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு, அதன் வழிமுறை மற்றும் அறிவுரையின்படி மாநில தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. சுமூகமான, ஒழுங்கான,  அமைதியான தேர்தல் நடத்துவதற்காக மாநில தேர்தல் ஆணையம் மேற்கண்ட விதிமுறைகளை கையாள வேண்டும்.இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Tags : elections , local elections,assign , symbol ,Guidelines
× RELATED மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு...