சென்னை: இந்தியாவிலேயே மிகப்பெரிய பேரிடர் மேலாண்மை தடுப்பு கட்டமைப்பை தமிழகம் உருவாக்கியுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பெருமிதம் தெரிவித்துள்ளார். பிரிட்டன் தூதரகம், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை ஆகியவை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள நகரங்களில் பேரிடர் பாதிப்புகளை தடுப்பது தொடர்பான கருத்தரங்கம் சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கலந்துக் கொண்டு பேசிய போது, வெளிநாட்டினரே தமிழகத்தின் பேரிடர் மேலாண்மை தொலைநோக்கு திட்டம் டி.என்.எஸ்.மான் செல்போன் செயலி குறித்து வியப்பதாகவும் குறிப்பிட்டார். இதை தொடர்ந்து பேரிடர் காலங்களில் வானிலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் கவனமாக பின்பற்ற வேண்டும் என்றும் அலட்சியமாக எடுத்துக் கொள்ள கூடாது என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் 121 பேரிடர் மீட்பு நிலையங்கள் எப்போதும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார். கடந்த காலங்களில் சென்னையில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் தண்ணீர் தேங்கிய நிலையில் வெள்ளத்தனிப்பு நடவடிக்கைகள் காரணமாக கூடுதலான நிதி ஒதுக்கி தற்போது 200 இடங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, பேரிடர் காலம் குறித்து மக்களுக்கு அதிக விழிப்புணர்வு தேவைப்படுவதாகவும், ஏனெனில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மக்களுடைய பங்களிப்பு என்பது மிகவும் மகத்தானது என்றும் அவர் குறிப்பிட்டார். இதை தொடர்ந்து கஜா புயலில் மக்கள் அளித்த ஒத்துழைப்பின் காரணமாகத்தான் நாம் அதில் வெற்றிபெற முடிந்ததாக அவர் தெரிவித்தார்.