×

கால்வாய் சேதம் பாசன தண்ணீர் வீணாகும் அபாயம்: சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

இளையான்குடி: இளையான்குடி அருகே கால்வாய் சேதமடைந்துள்ளதால் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த கால்வாயை சீரமைக்க விவசாயிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. பார்த்திபனூர் அருகே வைகை ஆற்றின் குறுக்கே இடது பிரதான மதகு அணையில் சுமார் 30 கிமீ தூரம் வரை சாலைக்கிராமம் வரத்துகால்வாய் செல்கிறது. வைகை அணை பாசனத்திற்காக தண்ணீர் திறக்கும்போது இந்த கால்வாய் வழியாகத்தான் நீர் வந்தடையும். அவ்வாறு வரும் தண்ணீர் செங்கோட்டை, தெ.புதுக்கோட்டை, பிராமணக்குறிச்சி, முள்ளியரேந்தல், முனைவென்றி, திருவுடையார்புரம், சிறுபாலை, புலியூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களை கடந்து கடைசியாக சாலைக்கிராமம் பெரியகண்மாய்க்கு வந்தடையும். இந்த கால்வாயை நம்பி பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் உள்ளன. பல விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் இந்த கால்வாய், வாணி விலக்கிற்கும், கபேரியல் பட்டிணத்திற்கும் இடையில் கரை சேதமடைந்துள்ளது. அதனால் பாசன நிலங்களுக்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திறக்கப்படும் தண்ணீர் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. கடந்த சில நாட்களுக்குமுன் காளையார்கோவில் பகுதியில் வீணாகிய மழை நீரைப்போல, இந்த பகுதியிலும் வீணாகும் நிலை உள்ளது. அதனால் சேதமடைந்த சாலைக்கிராமம் கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து விவசாயி முருகேசன் கூறுகையில், இந்த கால்வாயை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. தண்ணீர் வரும் வரத்துகால்வாய் உடைக்கப்பட்டு பல மாதங்களாகிறது. இதுவரை அதிகாரிகள் வந்து பார்க்கவில்லை. வருவாய்த்துறையினர் கண்டுகொள்வதே இல்லை. மழை நீர் வீணாகும் அவலம் உள்ளது. அதனால் இந்த பகுதியில் விவசாயம் அழியும் நிலை உள்ளது. அதனால் கால்வாயை சீரமைக்க கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Water, Farmers, Ilangudi
× RELATED மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில்...