×

திருச்சியில் பயங்கரம்,..அமைச்சர் வளர்மதி வீடு அருகே பாடிபில்டர் வெட்டிக்கொலை

திருச்சி: திருச்சியில் அமைச்சர் வளர்மதி வீடு அருகே, பாடி பில்டர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஆட்டோ டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி உறையூர் மின்னப்பன் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் மணிகண்டன் (22). பாடி பில்டரான இவர், ஜிம் உடற்பயிற்சி கருவிகளை பழுது பார்க்கும் வேலை செய்து வந்தார். இவரை ஜிம் மணிகண்டன் என்றும் அழைப்பார்கள். இவரது நண்பன் சடைமணி (33). பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டுக்காரர் செந்தில்குமார் (43). பீரோ கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில் செந்தில்குமார் தன்னிடம் வந்து அடிக்கடி வம்பு இழுக்கிறார். அவரை கண்டித்து வைக்கும்படி சடைமணி, தனது நண்பர் மணிகண்டனிடம் கூறி உள்ளார். ஆனால், அவரிடம் பார்த்துக்கொள்ளலாம், பொறுமையாக இரு என மணிகண்டன் கூறி வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் விடுமுறை நாள் என்பதால் வீட்டில் இருந்த செந்தில்குமாருக்கும், சடைமணிக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதை தனது நண்பர் மணிகண்டனிடம் கூறினார். உடனே அவர் அங்கு வந்து செந்தில்குமாரை கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.  இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், செந்தில்குமாரை கீழே தள்ளி தாக்கினார். இதை பார்த்த செந்தில்குமாரின் அக்கா மகன் ஆட்டோ டிரைவரான புகழேந்தி (23) அரிவாளால் மணிகண்டனை சரமாரியாக வெட்டினார். இதில் முகம், பின்னந்தலையில் வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.

உடனடியாக அவரை திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நேற்று காலை சிகிச்சை பலனின்றி  மணிகண்டன் இறந்தார். இது குறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிந்து ஆட்டோ டிரைவர் புகழேந்தியை தேடி வருகின்றனர். கொலை நடந்த மின்னப்பன் மேலத்தெருவுக்கு அடுத்த தெருவான 3வது தெருவில் தான் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி வசித்து வருகிறார்.  அமைச்சர் வீட்டு அருகே நடந்த இந்த கொலை சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Bodybuilder ,Minister ,Trichy Trichy ,Valarmathi Home ,Intersection Bodybuilder , Trichy, Minister Walarmathi, Bodybuilder
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...