கோவை: கோவை அருகே ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக ஆட்டோ டிரைவர் மீது வழக்கு பதிவானது. ஆதாரமில்லாததால் அவரை சிறையில் அடைக்காமல் நீதிபதி விடுவித்தார். கோவை கருமத்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் ஆகியோர் கடந்த 20ம் தேதி கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோயில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்ேதகப்படும் வகையில் நின்ற வாலிபர் ஒருவரை பிடித்து போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பூபாலன் (31) என தெரியவந்தது. இவர் மீது, சதி திட்டம் தீட்டி தமிழகத்தில் ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டதாக வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர், பூபாலனை சூலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கின் தன்மை குறித்து விசாரித்த நீதிபதி வேடியப்பன், சதி திட்டம் தீட்டி ஆட்சி கவிழ்க்க எந்த முகாந்திரமும் இல்லை, எந்த ஆதாரத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்தீர்கள், இவரால் ஆட்சியை கவிழ்க்க முடியுமா, இவரை சிறையில் அடைக்க முடியாது எனக்கூறி விடுவித்தார். பூபாலன் அ.ம.மு.கவில் உறுப்பினராக இருப்பதாக தெரிகிறது. இவருக்கும் கருமத்தம்பட்டி பகுதி உளவுப்பிரிவு போலீஸ்காரரின் உறவினர் ஒருவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இதை தொடர்ந்து அவரை பழி வாங்க, போலியாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து ரவுடி பட்டியலில் பெயர் சேர்்க்க போலீசார் திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது.