திருமலை: திருப்பதி மலைப்பாதையில் சுமார் 2 ஆயிரம் அடி உயரத்தில் இயற்கையாகவே அமைந்துள்ள பெருமாளுக்கு இளைஞர்கள் அந்தரத்தில் தொங்கியபடி பாலாபிசேகம் செய்து ஒரு டன் எடையுள்ள மாலை அணிவித்து தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் ஏழு மலைகள் மீது அமைந்துள்ளது. ஏழுலையானை தரிசனம் செய்ய பக்தர்களின் வசதிக்காக பஸ்கள் இயக்கப்படுகிறது. இதை தவிர இருசக்கர வாகனங்கள், கார்கள், ஜீப், வேன்களிலும் பக்தர்கள் சென்று வருகின்றனர். இதை தவிர நடைபாதையாகவும் பக்தர்கள் செல்கின்றனர். இந்நிலையில், மலைப்பாதையின் கடைசி வளைவில் நாராயணகிரி மலை உள்ளது.
இம்மலையின் மீது இயற்கையாகவே பெருமாளின் உருவம் காணப்படுகிறது. இங்கு புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையன்று திருமலை பாலாஜி நகரை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து சுமார் 2 ஆயிரம் அடி உயரத்துக்கு மேல் அமைந்துள்ள இயற்கை பெருமாள் சிலைக்கு அபிசேகம், மாலை அணிவித்து தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி நேற்று குடங்களில் பால், சந்தனம் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின்னர், குடத்தால் தயார் செய்யப்பட்ட மாலை, 1000 கிலோ பூக்களால் ஆன மாலையை அணிவித்து கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர். அப்போது அங்கிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி முழக்கமிட்டனர்.