×

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா ஏற்பு

* வினீத் கோத்தாரி பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமனம்
* மத்திய சட்ட அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: மேகாலயாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா கடிதத்தைக் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டதாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தற்போதைய மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக (பொறுப்பு) அறிவிக்கப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த 2018 ஆகஸ்ட் 12ல் வி.கே.தஹில் ரமானி பதவியேற்றுக் கொண்டார். சில வாரங்களுக்கு முன்னர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியை, மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்தும், மேகாலய மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ஏ.கே.மிட்டலை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்தும், உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய குழு (கொலீஜியம்) மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது.
முன்னதாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மூத்த நீதிபதிகள் எஸ்.கே.பாப்டே, என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்.எஃப். நாரிமன் ஆகியோர் அடங்கிய குழு கடந்த ஆக. 28ம் தேதி, உயர் நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்ற முடிவை எடுத்தது. ஆனால், இந்த இடமாற்ற முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி, உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழுவுக்கு கோரிக்கை மனுவை அனுப்பினார். ஆனால் இக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, தஹில் ரமானி, தனது பதவியை ராஜினாமா செய்தார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்துக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார். இதன் நகலை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கும் அனுப்பினார். கொலீஜியத்தின் பரிந்துரை மற்றும் தனது பதவி விலகல் கடிதத்தின் மீது குடியரசுத் தலைவர் முடிவெடுக்கும் வரை வழக்குகளை விசாரிப்பதில் இருந்தும், உயர் நீதிமன்ற நிர்வாக நடவடிக்கைகளில் இருந்தும் தலைமை நீதிபதி விலகியிருந்தார். இதற்கிடையே, தஹில் ரமானி இடமாற்றத்தை கண்டித்து, சி வக்கீல்கள் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். அதேபோல், உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி வக்கீல் கற்பகம் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு விசாரணைக்கு உகந்ததா, இல்லையா என்பது குறித்து முடிவு செய்ய நீபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.

அப்போது நீதிபதிகள், ‘பாதிக்கப்பட்டதாக கருதும் நீதிபதிகள்தான் வழக்கு தொடர முடியும்; மற்றவர்கள் வழக்கு தொடர முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நிர்வாக ரீதியில் மட்டுமே அவர் உயர் பதவியான தலைமை நீதிபதி பதவியை வகிக்கிறார். அந்த வகையில் பணியிடம் மாற்றம் செய்யலாம் என்று அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளாதாக கூறி, இவ்வழக்கு விசாரணைக்கு உகந்ததா இல்லையா என்பது குறித்த தீர்ப்பை தேதியை குறிப்பிடாமல் நீதிபதிகள் வழக்கைத் தள்ளிவைத்தனர்.இந்நிலையில், நேற்று காலை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா கடிதத்தைக் குடியரசு தலைவர் ஏற்றுக் கொண்டதாக, அதிகாரப்பூர்வ அறிவிப்பு ெவளியானது. 2 பக்கம் உள்ள அந்த கடிதத்தில், ‘உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா (செப். 6) ஏற்கப்படுகிறது. 2வது மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பொறுப்பு வகிப்பார்’ எனக் கூறப்பட்டுள்ளது. இதனை, மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

Tags : Tahil Ramani ,Chennai High Court ,resignation , Chennai,High Court Chief ,Justice Tahil Ramani, accepts
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...