டெல்லி: வரும் 2022-ம் ஆண்டுக்குள் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்றம் என்பது நாட்டின் அடையாளமாகவும், ஜனநாயகத்தின் விளங்குகிறது. அதன் அடிப்படையில் இந்தியாவின் நாடாளுமன்ற கட்டடம் கடந்த 1927ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கட்டட வடிவமைப்பாளர்கள் சர் எட்வின் லியூடென்ஸ் மற்றும் சர் ஹெர்பெர்ட் பெக்கர் ஆகிய இருவர்களின் திட்டத்தின் படி கட்டப்பட்டது. இதனை அப்போதைய வைசிராய் லார்ட் இர்வின் திருந்துவைத்தார். 1950ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதி இந்தக் கட்டடம் இந்திய நாடாளுமன்றம் என்ற அந்தஸ்தை பெற்றது.
இந்நிலையில் இந்த நாடாளுமன்றம் கட்டப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. எனவே இதனுடைய பழைமை, பாதுக்காப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு புதிய நாடாளுமன்றம் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகளையும் மத்திய அரசு துவங்கியுள்ளது. மேலும் நாடாளுமன்ற கட்டிடத்தோடு, அதன் அருகே சுமார் 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைத்துள்ள உள்ள பிரதமர், உள்துறை, நிதித்துறை, பாதுகாப்புத் துறை உள்ளிட்ட 30 மத்திய அரசு அமைச்சக அலுவலகங்களையும் ஒரே வளாகத்தில் கொண்டுவரும் வகையிலும், மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது மட்டுமல்லாமல் மத்திய அரசு அமைச்சகங்களுக்கு ஒரு பொதுவான மத்திய தலைமை செயலகம் ஒன்றை கட்டுவதற்கும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனை வரும் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதிக்குள் கட்டி முடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய பொதுபணித்துறை ஆயத்தங்களை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.