ஹாங்காங்: பிரிட்டன் தூதரகம் முன் ஹாங்காங் போராட்டக் குழுவினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹாங்காங்கில் குற்றம் செய்பவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹாங்காங்கில் கடந்த ஜூன் மாதம் முதல், வார இறுதி நாட்களில் ரயில் நிலையம், விமான நிலையம், பல்கலைக் கழகம் ஆகியவை முன் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போராட்டக் குழுவினர் நேற்று பிரிட்டன் தூதரகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பிரிட்டன் கொடிகளை அசைத்தவாறு, இங்கிலாந்தே ஹாங்காங்கை காப்பாற்று’ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். மேலும் காட் சேவ் தி குயின்’ என்ற பாடலையும் ஊர்வலத்தில் பாடினர். மேலும், பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்து கடந்த 1997ம் ஆண்டு ஹாங்காங் விடுவிக்கப்பட்ட போது ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட தன்னாட்சியை உறுதிபடுத்தி தரும்படியும் பிரிட்டனுக்கு போராட்டக் குழுவினர் வேண்டுகோள் விடுத்தனர்.