×

பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு நடுரோட்டில் பிரசவம் பார்த்த இன்ஸ்பெக்டர்

சென்னை: சூளைமேடு சவுராஷ்டிரா நகர் 8வது தெருவை சேர்ந்தவர் பானுமதி. நிறைமாத கர்ப்பிணி. இவரது கணவர் இரவு பணிக்கு சென்று விட்டார். வீட்டில் பானுமதி மட்டும் தனியாக இருந்தார். நேற்று அதிகாலை 2.45 மணிக்கு பானுமதிக்கு பனிக் குடம் உடைந்து பிரசவ வலி எடுத்துள்ளது. குழந்தைக்கு ஆபத்து என்று கருதிய பானுமதி ஆட்டோவை பிடிக்க சாலைக்கு வந்துள்ளார். ஆனால் ஆட்டோக்கள் எதுவும் வரவில்லை. பானுமதியால் வலியால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டு சூளைமேடு நெடுஞ்சாலையில் படுத்தப்படி துடித்தார். அப்போது இரவு ேராந்து பணியில் ஈடுபட்ட சூளைமேடு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சித்ரா, பானுமதியின் அழுகுரல் கேட்டு தனது வாகனத்தை நிறுத்தினார். பிரசவ வலியால் துடித்த அவரை தனது வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றார். ஆனால் அந்த பெண்ணுக்கு பனிக்குடம் உடைந்து ரத்த போக்கு அதிகமாக இருந்ததால் வாகனத்தில் ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டது.

உடனே தனது ரோந்து வாகனத்தை வைத்து இன்ஸ்பெக்டர் சித்ரா தனது பெண் காவலர் மற்றும் அருகில் குப்பை சேகரிக்கும் பெண்களின் உதவியுடன் பானுமதிக்கு பிரசவம் பார்த்தார். அதில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிறகு 108 ஆம்புலன்ஸ் வரைவழைத்து பெண் மற்றும் குழந்தையை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது மருத்துவமனையில் தாய் மற்றும் குழந்தை மருத்துவர்களின் கண்காணிப்பில் நலமாக உள்ளனர். இன்ஸ்பெக்டரின் துணிச்சலான செயலுக்கு அப்பகுதி பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு நேரில் வந்தும் மற்றும் சமூக வலைதளங்களிலும் பாராட்டி வருகின்றனர்.

Tags : Inspector ,birth , Inspector, birth at midnight ,woman suffering from childbirth
× RELATED காவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு: அதிகாரிகள் ஆய்வு