×

வேலூரில் போலி மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வந்த புகாரினை தொடர்ந்து 19 போலி மருத்துவர்கள் அதிரடியாக கைது

வேலூர்: வேலூரில் ஒரேநாளில் 19 போலி மருத்துவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டம் முழுவதும் போலி மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறைக்கு புகார்கள் வந்தன. மருத்துவர்களிடம் உதவியாளராக இருப்பவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் ஆகியோர் தங்களது வீடுகளில் கிளினிக் வைத்தும், தனியாக கிளினிக் நடத்தியும், மருத்துவம் பார்த்து வருவதாகவும் புகார்கள் எழுந்தன. இதை தொடர்ந்து 10ம் வகுப்பைக் கூட நிறைவு செய்யாத பலர் போலி மருத்துவம் செய்து, பொதுமக்களின் உயிரோடு விளையாடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழவே, மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் யாஸ்மின் ஆகியோரது தலைமையில் மருத்துவர், காவல் உதவி ஆய்வாளர், சார்பு உதவி ஆய்வாளர் ஆகியோர் அடங்கிய 35 குழுக்கள் அமைக்கப்பட்டன.

அந்த குழுக்கள் மாவட்டம் முழுவதும் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர். சுமார் 100க்கும் மேற்பட்ட இடங்களில் அந்த குழுக்கள் நடத்திய சோதனையில் திருப்பத்தூரை சேர்ந்த குலசேகரன், சத்யநாராயணன், மாது, வெங்கடேசன், அச்சுதன் மற்றும் வாணியம்பாடியை சேர்ந்த யுவராஜ், மோகன்ராஜ், சண்முகசுந்தரம், மேல்பட்டியை சேர்ந்த குப்புசாமி, பரதராமி பகுதியை சேர்ந்த ரமணா, ஸ்ரீநிவாசலு, துரைசாமி, சுரேஷ்குமார், சுமைதாங்கி ஜெயபால், சோளிங்கர் பிரபு, பனப்பாக்கம் அருள்தாஸ் ஆகிய 19 போலி மருத்துவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மேலும் 10க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டதாக கூறப்படுவதால் அவர்களை தேடும் பணி முடிக்கிவிடப்பட்டுள்ளது. இதை அடுத்து கைது செய்யப்பட்ட போலி மருத்துவர்களின் கிளினிக்குகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

கிளினிக்குகளில் இருந்த மருந்து மாத்திரைகள், மருத்துவ உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து பேசிய மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் யாஸ்மின் தொடர்ந்து கண்காணித்து தான் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்திருப்பதாகவும், மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் முழுவதுமாக களையெடுக்கப்படுவார்கள் என்றும் உறுதிப்பட தெரிவித்தார். போலி மருத்துவர்களிடம் இருந்து பொதுமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அரசின் அங்கீகாரம் பெற்ற மருத்துவர் தானா என்பதை உறுதி செய்த பின்னரே சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும் என்று யாஸ்மின் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Tags : doctors ,Vellore , Vellore, 19 fake doctors, complained, arrested
× RELATED வேலூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து...