புதுடெல்லி: சட்ட விரோத அமைப்புகளுக்கும், தீவிரவாத செயல்களுக்கும் உதவி செய்யும் தனி நபரையும் தீவிரவாதியாக அறிவிக்க, புலனாய்வு அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கும், ‘சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்ட திருத்தம்’ கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டத்தை எதிர்த்து சாஜல் அஸ்வதி என்பவர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ‘இச்சட்ட திருத்தம், அரசியலமைப்பு பிரிவு 21க்கு எதிரானது. தனி மனித உரிமை, சுதந்திரத்தை பறிக்கும் செயலாகும், இதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்,’ என அவர் கூறியுள்ளார். இது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.