திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்தவர் யூசுப் அலி. இந்தியாவின் பல்வேறு பகுதிகள், வளைகுடா நாடுகளில் வணிக வளாகங்கள் உள்பட ஏராளமான தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். நேற்று கொச்சியில் ஒரு மருத்துவமனையில் உள்ள உறவினரை பார்க்க, பத்தனம்திட்டாவில் இருந்து மனைவி, உறவினர்கள் என்று 7 பேருடன் தனக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் புறப்பட்டார். பனங்காடு பகுதியில் உள்ள மீன்வள கல்லூரி மைதானத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சற்று முன்னதாக 8.30 மணியளவில் திடீரென ஹெலிகாப்டரில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால், 200 மீட்டருக்கு முன்னதாக பைலட் ஹெலிகாப்டரை தரையிறக்கினார். அந்த பகுதி வீடுகள் நிறைந்த சதுப்பு நில பகுதியாகும். பைலட் சமயோஜிதமாக செயல்பட்டு ஹெலிகாப்டரை உடனே தரையிறக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் ஹெலிகாப்டர் இறங்கிய அதிர்ச்சியில் 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஹெலிகாப்டரின் இறக்கைகள் அந்த பகுதியில் உள்ள ஒரு சுவருக்கு மிக அருகே ஒட்டிய நிலையில் காணப்பட்டது. இறக்கைகள் சுவரில் பட்டிருந்தால் தீவிபத்தும் ஏற்பட்டிருக்கலாம் என்று அந்த பகுதியினர் கூறினர்….
The post இயந்திர கோளாறால் வீடுகள் இருக்கும் இடத்தில் தரையிறங்கிய ஹெலிகாப்டர் appeared first on Dinakaran.