திருவனந்தபுரம்: சபரிமலை மற்றும் மாளிகைபுரம் கோயில்களுக்கு புதிய மேல்சாந்திகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆவணி மாத பூஜைகளுக்காக நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில் கோயில் மேல்சாந்தி வாசுதேவ நம்பூதிரி நடையை திறந்து தீபாராதனை காட்டினார். அன்று வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறவில்லை. நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம் நடந்தது. பின்னர் காலை 5.30 மணி முதல் 10 மணி வரை நெய் அபிஷேகம் நடைபெற்றது. 21ம் தேதி வரை இரவில்படி பூஜை நடைபெறும். 21ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் ஆவணி மாத பூஜைகள் நிறைவடையும். சபரிமலை, மாளிகைபுரம் கோயில்களுக்கான புதிய மேல்சாந்திகள் ஐப்பசி மாதம் 1ம் தேதி ேதர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். ஆனால் இந்த ஆண்டு ஆவணி மாதம் மேல்சாந்திகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதன்படி நேற்று காலை 8 மணியளவில் சபரிமலை, மாளிகைப்புரம் கோயில் புதிய மேல்சாந்திகள் தேர்வு ெதாடங்கியது.
பந்தளம் அரண்மனையை சேர்ந்த மாதவ் கே.வர்மா மற்றும் காஞ்சனா கே.வர்மா ஆகிய இருவரும் புதிய மேல்சாந்தியை தேர்வு செய்தனர். இதில் சபரிமலை கோயில் மேல்சாந்தியாக மலப்புரம் மாவட்டம், திரூர், திருநாவாயாவை சேர்ந்த சுதீர் நம்பூதிரியும், மாளிகைபுரம் மேல்சாந்தியாக எர்ணாகுளம் அருகே ஆலுவா பாறக்கடவை சேர்ந்த பரமேஸ்வரன் நம்பூதிரியும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் சுதீர் நம்பூதிரி, திருநாவாயாவை நாவாமுகுந்தா கோயிலில் மேல்சாந்தியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு செய்யப்பட்ட மேல்சாந்திகள் புரட்டாசி மாதம் 1ம் தேதி முதல் அந்த மாதம் முழுவதும் சபரிமலையில் தங்கி இருந்து கோயில் பூஜைகள் குறித்து படிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து மண்டலகால பூஜைக்கு நடை திறக்கப்படும். அன்று இவர்கள் புதிய மேல்சாந்திகளாக பொறுப்பேற்பார்கள். கார்த்திகை 1ம் தேதி முதல் இருவரும் நடை திறந்து பூஜைகள் செய்வார்கள்.