சென்னை : ஏழைகள் இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். சென்னை பல்லாவரத்தில் 26 பள்ளிகளை சேர்ந்த 10,336 மாணவர்களுக்கு, நேற்று முன்தினம் புனித தெரசாள் பள்ளியில் அரசு சார்பில் மடிக்கணினி வழங்கும் விழா நடந்தது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்க எடுக்கப்பட்ட கொள்கை முடிவின்படி தமிழக அரசு வழங்கி வருகிறது. கடந்த 2017, 2018ம் ஆண்டுகளில் படித்த மாணவர்களுக்கு இன்னும் 2 வார காலத்துக்குள் மடிக்கணினி வழங்கப்படும்.
இதுவரை ஒரே ஆண்டில் 15 லட்சத்து 72 ஆயிரம் மடிக்கணினிகள் வழங்கிய வரலாறு தமிழ்நாட்டில் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது. புதிய பாட திட்டத்தில், நீட் தேர்வுக்கான நூற்றுக்கு நூறு விடைத்தாள்கள் உள்ளது. மத்திய அரசின் அனுமதியை விரைவில் பெற்று 8, 9, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 20 லட்சம் லேப்டாப் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஏழைகள் இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக்கப்படும் என்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கூற்றுப்படி, தமிழக பள்ளி கல்வி துறையில் நாங்கள் அதற்கான பணிகளை ஆற்றி வருகிறோம்.