×

வேக்சின் போட்டாலும் வருகிறது என நினைத்து போடாமல் இருக்காதீர் தடுப்பூசி போட்டவர்களுக்கு தொற்று வந்தால் உயிரிழப்பு குறைவு: கீழ்ப்பாக்கம் மருத்துவமனை முதல்வர் வசந்தாமணி தகவல்

சென்னை: தடுப்பூசி போட்டாலும் தொற்று வருகிறது என்று தவறாக நினைத்துக் கொண்டு வேக்சின் போடாமல் இருக்காதீர்கள். தடுப்பூசி போட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் உயிரிழப்பு பயம் தேவையில்லை, உயிரிழப்பும் ரொம்ப, ரொம்ப குறைவு என்று கீழ்ப்பாக்கம் மருத்துவமனை முதல்வர் வசந்தாமணி கூறினார். இதுகுறித்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை முதல்வர் வசந்தாமணி கூறியதாவது: கொரோனா, இரண்டாம் அலை வேகமாக பரவ தொடங்குகிறது. தற்போது லேசான காய்ச்சல், தலைவலி, இருமல் இருக்கிறவர்கள் தங்களுக்கு இல்லை என்று நினைத்து கொண்டு இரண்டு நாட்கள் கழித்து தீவிர மூச்சு, திணறல் வரும்போது மருத்துவமனைக்கு வருகிறார்கள். அதனால் உயிரிழப்பு சதவீதம் அதிகமாகிக் கொண்டு இருக்கிறது.கண்டிப்பாக அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க அனைவரும் முன்வர வேண்டும். தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் எவ்வளவு முன் வந்தாலும், மக்கள் அதற்கு துணை நிற்க வேண்டும். இப்படித்தான் இதை கட்டுக்குள் கொண்டு வரமுடியும். இரண்டாவது அலை வருவதற்கு உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே வழிகாட்டு நெறிமுறைகளை கொடுத்துள்ளனர். நிறைய நாடுகளில் இரண்டாவது அலை வந்து முடிவு பெறும் நிலையில் உள்ளது. அதேபோன்று இரண்டாவது அலை இந்தியாவிற்கும் வர வாய்ப்புள்ளது. இந்தியாவிற்கு வராது என்று இருக்கக்கூடாது, அதிக பாதிப்பு இருக்கிறது. முதல் தடவை வந்ததை விட இரண்டாவது தடவை பாதிப்பு அதிகமாக இருக்கும். தற்போது இரண்டு மூன்று காரணங்கள் ஒன்றாக வந்துள்ளது. மக்களிடம் பயம் இல்லை. அதனால் முகக்கவசம் அணிவதில்லை, சமூக இடைவெளியை பின்பற்றுவது இல்லை. மேலும் ஊரடங்கில் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வு கொண்டு முழுவதுமாக விலக்கு அளிக்கப்பட்டது. சமூக இடைவெளி, மாஸ்க் அணிவதில்லை, கூட்டம் அதிகமாக கூட ஆரம்பித்து விட்டனர். அந்த இடத்தில் அறிகுறி மற்றும் பாதிக்கப்பட்டவருடன் அரைமணி நேரம் இருந்தால் போதும் அவர்களுக்கு தொற்று வரக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. குடும்பத்தில் உள்ள ஒருவர் பாதிப்புக்குள்ளானால் அவர் முகக்கவசம் அணியாமல் இருப்பதால் குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் பாதிக்கப்படுகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் நிறைய பேர் மருத்துவமனைக்கு வரும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முன்பு வந்த கொரோனா வேற மாதிரி இருந்தது. அதாவது காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடம்பு வலி போன்ற அறிகுறிகள் இருந்தது. மேலும் 7 நாட்களுக்கு பிறகு தான் நுரையீரல் பாதிக்கப்பட்டது. தற்போது நேரடியாக நுரையீரலை பாதிக்கிறது. அதனால் லேசான காய்ச்சல், இருமல் இருந்தால் கூட அதிக பாதிப்புடன் மருத்துவமனைக்கு வருகின்றனர். மேலும் சர்க்கரை நோய், இதய நோய், ரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள், கிட்னி பாதிப்பு உள்ளவர்கள், முதியவர்கள் அதிகம் பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது வந்துள்ள கொரோனா பாதிப்பு முதியவர்கள், இளைஞர்கள் 20-40 வயது உடையவர்களையும் பாதிக்கிறது. அதனால் இறப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மக்களிடம் விழிப்புணர்வு வேண்டும். யாருக்கு வேண்டுமானாலும் கொரோனா தொற்று வருவதற்கு வாய்ப்புகள் இருக்கு. மேலும் தடுப்பூசி போட்டாலும் கொரோனா தொற்று வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தடுப்பூசி போட்டு நோய் எதிர்ப்பு சக்தி வந்தவர்களுக்கு தீவிர பாதிப்பு இருக்காது. தடுப்பூசி போடாதவருக்கு தீவிரமான பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் நிறைய உள்ளது. எனவே வாய்ப்பு உள்ளவர்கள் அனைவரும் தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி போட்டாலும் தொற்று வருகிறது என்று தவறாக நினைத்துக் கொண்டு போடாமல் இருக்காதீர்கள். போட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் உயிரிழப்பு பயம் தேவையில்லை. உயிரிழப்பும் ரொம்ப, ரொம்ப குறைவு. மேலும் தொற்று அதிகரித்து வருவதால் தற்போது படிப்படியாக ஊரடங்கை, கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டிய நிலையில் அரசு உள்ளது. மக்களும் அதை பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அனைவரும் முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடித்தல், அடிக்கடி கைகளை கழுவுதல் போன்றவை கடைபிடிக்க வேண்டும். சென்னையில் மக்கள் தொகை மற்றும் அதிக கூட்டங்கள் இருப்பதால் தொற்று அதிகமாக பரவுகிறது. சென்னை மட்டுமல்ல, மக்கள் தொகை அதிகம் உள்ள இடங்களில் பாதிப்பு அதிகமாகதான் வரும். தற்போது வைரஸ் தொற்றின் வீரியம் அதிகமாக இருக்கிறது. அதாவது ஒரு கோவிட் நோயாளி மற்ெறாருவருக்கு பரப்புவதற்கு நான்கு நாள் ஆகிறது என்றால் தற்போது பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து இரண்டு நாட்களில் 4 பேருக்கு பரவக்கூடிய வகையில் வீரியமாக உள்ளது. தற்போது இறப்பு அதிகரிக்க காரணமாக தொற்று நேரடியாக நுரையீரலை பாதிக்கிறது. மருத்துவமனைக்கு தாமதமாக வருகின்றனர். லேசான அறிகுறிகளுடன் பாதிப்பு அதிகமாகிறது. எனவே அவற்றை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்….

The post வேக்சின் போட்டாலும் வருகிறது என நினைத்து போடாமல் இருக்காதீர் தடுப்பூசி போட்டவர்களுக்கு தொற்று வந்தால் உயிரிழப்பு குறைவு: கீழ்ப்பாக்கம் மருத்துவமனை முதல்வர் வசந்தாமணி தகவல் appeared first on Dinakaran.

Tags : Kilpakkam Hospital ,Principal ,Vasanthamani ,CHENNAI ,
× RELATED சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிறார் செந்தில் பாலாஜி