×

வாரம் 2 நாள் கிடைக்கும் நீரையும் சென்னைக்கு அனுப்பினால் மக்கள் போராடுவார்கள் என்று கூறியதை திரித்து விட்டனர்: துரைமுருகன் விளக்கம்

சென்னை: வேலூருக்கு பற்றாக்குறையுடன் கிடைக்கும் காவிரி நீரை மறித்து சென்னைக்கு அனுப்பினால் மக்கள் போராடுவார்கள் என்பதை திரித்து சொல்லி விட்டனர் என்று துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். திமுக பொருளாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திமுக ஆட்சியில் கலைஞரும், மு.க.ஸ்டாலினும், வேலூர் மாவட்டத்திற்கென்று காவிரி தண்ணீரை ஒரு கூட்டுக் குடிநீர் திட்டமாக அறிவித்தார்கள். திருப்பத்தூரிலிருந்து அரக்கோணம் வரையில் இருக்கிற பல நகரங்களுக்கும், பல கிராமங்களுக்கும் காவிரி நீர் கிடைத்துக் கொண்டிருக்கிறது. வாரத்தின் அனைத்து நாட்களும் கிடைத்துக் கொண்டிருந்த, அத்தண்ணீரும் தற்பொழுது வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே கிடைக்கிறது.

இந்நிலையில், அந்த காவிரி தண்ணீரை மறித்து, ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு கொண்டு போவதாக இங்கே பேசிய பலர் தெரிவித்தனர். அப்படி கொண்டு போவது நியாயமும் அல்ல விவேகமும் அல்ல. ஜோலார்பேட்டையை தவிர, வேறு எங்காவது தண்ணீர் கிடைத்தால், அதனை சென்னைக்கு கொண்டு போவதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை.

அதைவிடுத்து, வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வினியோகிக்கப்படுகிற, பற்றாக்குறையுடன் எங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்ற காவிரி நீரை மறித்து, சென்னைக்கு கொண்டு போனால், எங்கள் வேலூர் மாவட்ட மக்கள் ஒரு போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றுதான் நான், இன்று (நேற்று) காலை,  வேலூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசினேன்.   

ஆனால், இப்பேச்சினை சில பத்திரிகைகளும், ஊடகங்களும், திரித்து  ‘ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு போவதற்கு துரைமுருகன் எதிர்ப்பு’ என்று தவறாக தலைப்பிட்டு மக்களிடத்தில் தவறான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார்கள். சென்னையில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகிறவன் நான், சென்னையில் என்ன நடக்கிறது என்று நன்றாகவே தெரியும். எனவே, ஒரு தவறான பிரசாரத்தை துவக்கி, அதன் மூலம் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Madurai , Madras, people, will fight, Duraimurugan, description
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை