பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த பழஞ்சூர் பகுதியில் தனியார் பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ளது. இங்கு நீச்சல் குளம், ராட்டினம், டிராகன், ரோப் கார் உள்ளிட்டவை உள்ளன. மேலும் ‘ப்ரீ பால் டவர்’ எனும் உயரே சென்று, அதே வேகத்தில் கீழே இறங்கும் ராட்டினம் அமைந்துள்ளது. இதற்கென நீண்ட உயரத்துக்கு ராட்சத இரும்புத்தூண் அமைக்கப்பட்டு அதன் 2 பகுதிகளிலும் இரும்பு கம்பியுடன் கட்டப்பட்ட தொட்டில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்த ‘ப்ரீ பால் டவர்’ ராட்டினம் தொட்டியில் நேற்று முன்தினம் ஏராளமான மக்கள் ஏறி சென்றனர். ராட்டின தொட்டில் வேகமாக இறங்கும்போது, தரையிலிருந்து ஒரு குறிப்பிட்ட உயரத்தில் அதன் இரும்பு கம்பி அறுந்து கீேழ விழுந்தது. அதில் இருந்தவர்களுக்கு அதிர்ஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை.
தகவலறிந்து நசரத்பேட்டை போலீசார் விரைந்து வந்து விசாரித்தபோது அந்த மையத்தில் உள்ள பெரும்பாலான பொழுதுபோக்கு சாதனங்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன என்பது தெரிந்தது. அந்த இயந்திரங்களின் தரம், உறுதித்தன்மை உள்ளிட்டவற்றை ஆண்டுக்கு ஒருமுறை அதிகாரிகள் ஆய்வு செய்து தடையில்லா சான்று வழங்க வேண்டும். ஆனால் இதுவரைதடையில்லா சான்று பெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் பொழுதுபோக்கு மையத்தை இயக்க கூடாது என போலீசார் எச்சரித்தனர். இதையடுத்து அந்த தனியார் பொழுதுபோக்கு மையம் இழுத்து மூடப்பட்டது.