நாட்டிங்காம்: ஆஸ்திரேலியாவுடனான உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் கடுமையாக போராடி 8 விக்கெட் இழந்து 333 ரன் எடுத்து 48 ரன் வித்தியாசத்தில் தோற்றது. நாட்டிங்காமில் நேற்று நடைப்பெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஆரோன் பிஞ்ச்-டேவிட் வார்னர் இணை அசத்தலாக விளையாடியது. வங்கதேசத்தின் 5 வீரர்கள் பந்துவீசியும் விக்கெட் எடுக்க முடியவில்லை. அதனால் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சவுமியா சர்க்கார் 21வது ஓவரை வீசினார். அந்த ஓவரில் பிஞ்சை(53ரன்கள்) வெளியேற்றினார்.
அப்போது அணியின் ஸ்கோர் 121ரன்கள். தொடர்ந்து வார்னருடன் இணை சேர்ந்த உஸ்மான் கவாஜாவும் பொறுப்புடன் விளையாடினார். இதற்கிடையில் வார்னர் 110 பந்துகளில் தனது 16வது சதமடித்தார். இந்த உலககோப்பையில் அவரது 2வது சதம் இது. அதன் பிறகு விளாச ஆரம்பித்த வார்னர் 166 ரன்களுக்கு சர்க்கார் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து 10 பந்துகளில் 32 ரன்கள் விளாசிய மேக்ஸவெல் ரன் அவுட்டானார். அடுத்து சதமடிப்பார் எதிர்பார்க்கப்பட்ட கவாஜா 89ரன்களில் சர்க்கார் வேகத்தில் வெளியேறினார். ஸ்மித் ஒரு ரன்னில் வெளியேறினார். ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 50 ஓவரில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 381 ரன்கள் குவித்தது.
அடுத்து களமிறங்கிய வங்கதேசம் தமீம் இக்பால் 62 ரன் எடுத்து அசத்தினார். ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஷாகிப் அல்ஹாசன் 41 பந்தில் 41 ரன் எடுத்து ரசிகர்களை ஏமாற்றினார். எனினும் முஷ்கிபூர் ரஹிம் 102 ரன் எடுத்து கடைசி வரை அவுட் ஆகவில்லை. அதற்கு பிறகு வந்த மகமதுல்லா அதிரடியாக ஆடி 69 ரன்னில் ஆட்டமிழந்தார். எனினும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களால் வங்கதேசத்தின் 10 விக்கெட்டுகளையும் விழ்த்த முடியாமல் திணறினர். இறுதியில் வங்கதேசம் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 333 ரன் எடுக்க ஆஸ்திரேலியா 48 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேசம் இந்த உலகப்கோப்பையில் 2வது முறையான 300 ரன்னுக்குள் மேல் எடுத்தது குறிப்பிடத்தக்கது.