சென்னை: நாளை வெளியாகவிருந்த பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் 20ஆம் தேதி வெளியாகும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஒரு லட்சத்து 13 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களது சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி கடந்த 13ஆம் தேதி வரை நடைபெற்றது.
நாளை, தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தரவரிசைப் பட்டியல் வெளியீடு தேதி 20ஆக மாற்றப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராமல் இருந்தவர்கள், சரியான சான்றிதழ்களை கொடுக்கத் தவறியவர்கள் ஆகியோர் இந்த தேதி மாற்றத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
சான்றிதழ் சரிபார்ப்புப் பணி இன்னும் முழுமை பெறாத காரணத்தால் தான் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும் தேதி மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 20ஆம் தேதி அன்று பொறியியல் படிப்புகளில் சேரும் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தரவரிசைப் பட்டியல் அன்றைய தினம் வெளியாவதால், கலந்தாய்வு தேதி மாற்றப்பட உள்ளது.