டெல்லி : தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளதாக டெல்லியில் தமிழக முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் 5-வது நிதி ஆயோக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்றார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்; மேகதாது அணைக்கு கர்நாடக அரசுக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு படி கர்நாடகா தண்ணீர் வழங்கும் என எதிர்பார்க்கிறோம். நடந்தாய் வாழி காவிரி என்ற திட்டம் மூலம் காவிரி நதி மேம்பாடு திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தினை 152 அடி உயர்த்த அனுமதி பெற்றுத்தர கேட்டுக்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். சிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும்.
ரூ. 700 கோடியில் சென்னையில் நிரந்தர வெள்ளத்தடுப்பு மையம் அமைக்கக் கோரிக்கை விடுத்துள்ளது. குடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் ஒரு விமான நிலையம் அமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் 2-ஆம் கட்ட மெட்ரோரயில் திட்டத்தை மத்திய , மாநில அரசு கூட்டுத்திட்டமாக செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.