சென்னை: தமிழகத்தில் 47.30 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களைமுதல்வர் திறந்து வைத்தார். தமிழகத்தில் 47.30 கோடியில் கட்டப்பட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான விடுதி கட்டிடங்கள், பள்ளிக் கட்டிடங்கள், தொழிற்பயிற்சி நிலைய கட்டிடம் மற்றும் பணிபுரியும் மகளிருக்கான விடுதி கட்டிடம் ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.
சென்னை சைதாப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை, திருவள்ளூர் மாவட்டம் வடகரை, கண்டிகை மற்றும் சோழவரம், விழுப்புரம் மாவட்டம் மைலம், தேனி மாவட்டம் பெரியகுளம், புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, கடலூர் மாவட்டம் குமராட்சி, ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம், நீலகிரி மாவட்டம் உதகமண்டலம், திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர், கல்லூர் மற்றும் சேர்ந்தமரம், தூத்துக்குடி மாவட்டத்துக்கு உட்பட்ட பெரியசாமிபுரம், கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைக்கட்டி, நாமக்கல் மாவட்டம் வாழவந்திநாடு (கொல்லிமலை) ஆகிய இடங்களில் ₹21.60 கோடியில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான 19 விடுதிக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.அதேபோல், திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் ₹1.10 கோடியில் பணிபுரியும் மகளிருக்கான விடுதி கட்டிடம், திருவள்ளூர் மாவட்டம் வடகரையில் ₹3.30 கோடியில் கட்டப்பட்ட தொழிற்பயிற்சி நிலையக் கட்டிடம் என மொத்தம் ₹47.30 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.