நெல்லை: இந்திய அணுசக்தி கழகம் நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் அணு எரிபொருள் கழிவுகளை சேமிக்கும் வளாகத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. இதை எதிர்த்து போராட்டக் குழுவினரை ஒன்று திரட்டும் வகையில் நெல்லையில் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க பச்சை தமிழகம் நிறுவனர் உதயகுமார் நாகர்கோவிலில் இருந்து பஸ்சில் புறப்பட்டு வந்தார். கைது செய்யப்படும் சூழல் நிலவியதால் மூன்றடைப்பு பகுதியில் உதயகுமார் பஸ்சில் இருந்து இறங்கி, ஒரு காரில் எங்கோ சென்றுவிட்டார். அவரை மாலை வரை தேடிய அணுஉலை எதிர்ப்பாளர்கள் பாளை வீரமாணிக்கபுரத்தில் அவர் இல்லாமலே கூட்டம் நடத்திவிட்டு கலைந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து பச்சை தமிழகம் நிறுவனர் உதயகுமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு நான் பஸ்சில் வந்தபோது, நெல்லை புதிய பஸ்நிலையத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்ததை அறிந்தேன். என்னை கைது செய்ய திட்டமிட்டிருப்பதாக சிலர் தெரிவித்தனர். எனவேதான் கூட்டம் நடக்கும் இடத்திற்கு நான் செல்லாமல், பஸ்சிலிருந்து இறங்கி காரில் இருந்தபடி செல்போனில் ஆலோசனையில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்பினேன். இந்தியா ஜனநாயக நாடு என்பதையும், இங்கே கூடுவதற்கும், பேசுவதற்கும் அனைவருக்கும் உரிமை இருக்கிறது என்பதை காவல்துறை, உளவுத்துறைக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இங்கே அடக்குமுறைகளை, அநியாயங்களை எதிர்த்தால் முகிலனை போல் காணாமல் போக வேண்டியதுதான். நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்கள் மற்றும் எஸ்.பி.க்களுக்கு கடிதம் அனுப்பி என் கடமைகளை செய்வது எந்த பிரிவின் கீழ் குற்றமாகிறது என நியாயம் கேட்க போகிறேன்.இவ்வாறு கூறியுள்ளார்.