சென்னை: நடிகர் சங்க தேர்தலில் ரஜினி, கமல் அதிகாரப்பூர்வமாக யாருக்கு ஆதரவு என்று சொல்லும்வரை, அதை வதந்தியாக யாரும் பரப்ப வேண்டாம் என நடிகர் விஷால் கூறினார். நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக வேங்கடமங்கலத்தில் உள்ள நிலத்தை விற்றதாக சரத்குமார், ராதாரவி உள்பட 4 பேர் மீது காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவில், நடிகர் விஷால் புகார் அளித்தார். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கை முறையான விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி, நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால் மனு தாக்கல் செய்தார்.
இது தொடர்பாக ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்நிலையில், நடிகர் சங்கத்தின் நிலம் முறைகேடு வழக்கில் நேற்று நடிகர் விஷால் காஞ்சிபுரம் குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி தங்களது தரப்பு விளக்கத்தை தெரிவித்தார். பின்னர் வெளியே வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து துறைகள் போலவே சினிமாவிலும் வெற்றி தோல்விகள் உள்ளன. ரஜினி, கமல் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக யாருக்கு ஆதரவு என்று சொல்லும்வரை அதை வதந்தியாக பரப்ப வேண்டாம். தேர்தலில் சக நடிகர்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். நிச்சயமாக இந்த வருடம் நடிகர் சங்க கட்டிடம் திறப்பு விழா நடைபெறும்.