அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் காவல் நிலைய கட்டிடத்தின் தரை தளத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவு மற்றும் குற்றப்பிரிவும், முதல் தளத்தில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு, டிஎஸ்பி மற்றும் உதவி கமிஷனர் அலுவலகமும் இயங்கி வருகிறது. இதில், போக்குவரத்து புலனாய்வு பிரிவில் இன்ஸ்பெக்டர், உதவி ஆய்வாளர், காவலர்கள் உள்பட 6க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். வாகன விபத்து சம்மந்தமாக ஏராளமானோர் தினசரி இங்கு வந்து செல்கின்றனர்.
பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த காவல் நிலைய கட்டிடத்தை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால், போக்குவரத்து புலனாய்வு பரிவு அறையின் மேற்கூரை வலுவிழந்து அடிக்கடி கான்கிரீட் பெயர்ந்து விழுந்தது. அதுபோன்ற நேரங்களில் பணியில் இருக்கும் போலீசார் மற்றும் புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் அலறியடித்து வெளியே ஓடும் நிலை ஏற்பட்டது. மேலும், கான்கிரீட் பெயர்ந்த இடங்களில் கம்பிகள் வெளியே தெரிவதால், எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் போலீசார் பணிபுரிந்து வந்தனர். இதுகுறித்து ‘தினகரன்’ நாளிதழில் கடந்த 8ம் தேதி படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பேரில், போக்குவரத்து புலனாய்வு பிரிவு அறையில் சிதிலமடைந்த மேற்கூரையை அதிகாரிகள் நேற்று சீரமைத்தனர்.