×

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான 12ம்தேதி மனித சங்கிலியில் மார்க்சிஸ்ட் கட்சி பங்கேற்பு: கே.பாலகிருஷ்ணன் அறிவிப்பு

சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து வரும் ஜூன் 12ம் தேதி நடக்கும் மனித சங்கிலிப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கும் என்று மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு உள்ளிட்ட பல்வேறு பேரழிவு திட்டங்களை மத்திய பாஜ அரசும், மாநில அதிமுக அரசும் திட்டமிட்டு செயல்படுத்த முனைந்து வருகின்றன. இத்திட்டங்களால் தமிழக விவசாயமும், விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு, காவிரி பாசன மண்டலம் நாசமாகும் ஆபத்து உள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது.

தற்போது ஜூன் 5ம் தேதி முதல் ஜூன் 10ம் தேதி வரை டெல்டா மாவட்டங்களில் இருசக்கர வாகன பிரசாரத்தையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், நம்மாழ்வாரால் தொடங்கப்பட்ட “பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம்” சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து 2019 ஜூன் 12ம் தேதி மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை விழுப்புரம் மாவட்டத்திலிருந்து புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகை, திருவாரூர், புதுக்கேட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வரையிலான 596 கிலோ மீட்டர் தூரம் “மனிதச் சங்கிலிப் போராட்டத்தை” நடத்த உள்ளனர்.  விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், விளை நிலங்களை காப்பாற்றவும் நடைபெறும்  இந்த மனித சங்கிலிப் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது முழு ஆதரவினை தெரிவித்துக் கொள்கிறது. மேற்கண்ட மாவட்டங்களில் நடைபெறும் மனிதசங்கிலிப் போராட்டத்தில் கட்சி அணிகள் முழுமையாக கலந்துகொண்டு கண்டனக் குரலெழுப்ப வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Tags : party ,Marxist ,announcement ,K.Balakrishnan , Hydro carbon project, Marxist Party, K.Balakrishnan
× RELATED மின் உதவி பொறியாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மனு