குருகிராம்: குடிநீரை கொண்டு கார்களை கழுவிய புகாரில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லிக்கு குருகிராம் மாநகராட்சி ரூ.500 அபராதம் விதித்துள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கேப்டன் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி பங்கேற்று விளையாடி வருகிறது. ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட கோஹ்லி, டெல்லியின் புறநகரில் உள்ள குருகிராம் மாநகராட்சியின் வெறுப்புக்கு உள்ளாகி உள்ளார்.
நாடு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. இந்நிலையில், விராட் கோஹ்லி வசிக்கும் குருகிராம் பகுதியிலும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. அவர் வசித்து வரும் டிஎல்எப் பேஸ் 1ல் 6 கார்கள் அவரது பயன்பாட்டிற்காக நிறுத்தப்பட்டுள்ளன. இந்த கார்களை அவரது வீட்டு வேலைக்காரர்கள் குடிநீரை பயன்படுத்தி கழுவினர். இதுகுறித்து பக்கத்து வீட்டுக்காரர்கள் மாநகராட்சிக்கு புகார் தெரிவித்தனர். அதிகாரிகள் கோஹ்லி வீட்டுக்கு சென்று பார்த்தபோது, புகார் உண்மை என்று தெரிந்தது. இதையடுத்து கோஹ்லிக்கு ரூ.500 அபராதம் விதித்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.