×

பூந்தமல்லி அருகே பழஞ்சூரில் கோயில் சிலைகள் உடைப்பு: வடமாநில வாலிபர் கைது

பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த பழஞ்சூர் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த ஆனந்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோவிலை சுற்றிலும் சீரமைப்பதற்காக நேற்று மாலை கதவுகளை திறந்து வைத்திருந்தனர். மாலையில் கோயில் நிர்வாகிகள் வந்து பார்த்தபோது வளாகத்தில் உள்ள ஒரு அறையின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர், உள்ளே பார்த்தபோது ஒரு வடமாநில வாலிபர் ஒருவர் சட்டை ஏதும் அணியாமல் டவல் கட்டியபடி பீரோவை ஆராய்ந்து கொண்டு இருந்தார். இதை கண்டதும் அந்த கதவை வெளிப்புறமாக பூட்டினர். இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வாலிபரை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

இதன் பிறகு கோயிலுக்குள் சென்று நிர்வாகிகள் பார்த்தபோது சிலைகள் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வடமாநில வாலிபர் அந்த இரண்டு சிலைகளையும் அடித்து உடைத்து இருப்பது தெரியவந்தது. மேலும், அங்கு பொருட்கள் ஏதும் இல்லாததால் கோயிலுக்குள் வரும் அந்த வாலிபர் சத்தம் கேட்காமல் இருக்க கோயிலுக்குள் இருக்கும் ரேடியோவில் பாட்டு போட்டுவிட்டு அங்கு இருந்த ராகு மற்றும் நந்தி சிலையை கடப்பாரையால் உடைத்துள்ளார்.

அதில், ராகு சிலை இரண்டு துண்டாக உடைந்துவிட்டது. முன் பகுதியில் இருந்த நந்தி சிலையை கடப்பாரையால் குத்தி சேதப்படுத்தியும் இருப்பது தெரியவந்தது. பிடிபட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடிப்பதால் உண்மையாகவே மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபரா? மனநலம் பாதிக்கப்பட்டது போல் நடிக்கிறாரா? என்ற கோணத்தில் நசரத்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். வடமாநில வாலிபர் கோயில் சிலைகளை உடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Temple ,Panchandi ,Poonamalle , Poonamallee, Panchangoor, Temple statues, busting, northwest youth, arrested
× RELATED வார விடுமுறை முடிந்து சென்னை...