சென்னை: தமிழகத்தில் இருமொழி கொள்கையே தொடர்ந்து அமலில் இருக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்ட புதிய தேசிய கல்விக் கொள்கை 2019ன், வரைவு அறிக்கையில் இந்தி பேசாத மாநிலங்களிலும் மும்மொழி கொள்கை அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: தமிழகத்தில் திட்டமிட்டபடி ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பள்ளிக்கல்வித்துறை செயலாளர், இயக்குனர்கள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அதற்கான வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை புதிய பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. அந்த பாடத்திட்டத்தை முழுமையாக நடத்தி முடிக்க 210 நாட்கள் பள்ளிகளை நடத்த வேண்டும். காலதாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டால் பாடத்திட்டத்தை நடத்தி முடிக்க முடியாது. மாணவர்கள் அந்த புதிய பாடத்திட்டத்தில் சிறப்பாக படிக்க ஜூன் 3ம் தேதியே பள்ளிகளை திறக்க வேண்டியது கட்டாயம். தமிழகத்தை பொறுத்தவரை இருமொழி கொள்கையே நடைமுறைப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டபடி இரு மொழிகொள்கையே தமிழகத்தில் அமலில் உள்ளது. தமிழகத்தில் இருமொழி கொள்கையே தொடர்ந்து அமலில் இருக்கும்.