புதுடெல்லி: ஈரானிடம் இருந்து தடை விலக்கு அளிக்கப்பட்ட காலத்தை கடந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என இந்தியாவை அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின், ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்து வந்த டிரம்ப், கடந்தாண்டு அதில் இருந்து விலகினார். இதையடுத்து ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. மேலும், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய, உலக நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்தது. ஆனாலும், இந்தியா, சீனா, ஜப்பான், தைவான் உள்ளிட்ட 8 நட்பு நாடுகளுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொள்ளும் வகையில், நிபந்தனை அடிப்படையில் கடந்த நவம்பர் முதல் இந்தாண்டு மே வரை 6 மாதம் எண்ணெய் இறக்குமதி செய்ய சலுகை அளித்தது. இச்சலுகை கடந்த 2ம் தேதியுடன் முடிந்தது.. ஆனால், அமெரிக்காவின் தடையை மீறி, ஈரானிடம் இருந்து மீண்டும் எண்ணெய் இறக்குமதி செய்ய சீனா, இந்தியா முயற்சிப்பதாக ஊடகங்களில் கடந்த வாரம் செய்தி வெளியானது.
இதையடுத்து, ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை நிர்மூலமாக்கும் நடவடிக்கையாக, அதனிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சலுகை அளிப்பதை நிறுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. மேலும், சலுகை காலத்தை மீறி ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கினால் பொருளாதார தடை விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. இது குறித்து அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா கூறுகையில், இறக்குமதி சலுகையை நீட்டிக்க அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்து விட்டது. இதனால் ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை மே 2ம் தேதி முதல் இந்தியா நிறுத்தி உள்ளது,’’ என்றார். இந்திய கச்சா எண்ணெய் தேவையில் 10 சதவீதத்தை ஈரான் வினியோகித்து வந்து என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே முடிவானது’
அமெரிக்க உற்பத்தி பொருட்களுக்கு இந்தியா கூடுதல் இறக்குமதி வரி விதிப்பதாகவும் சலுகை, உரிய சந்தை வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதையும் காரணம் காட்டி, பொது வர்த்தக முன்னுரிமை திட்டத்தின் கீழ் உள்ள, இறக்குமதி சலுகைத் திட்டமான ஜிஎஸ்பி.யில் இருந்து இந்தியாவை நீக்க தீர்மானித்திருப்பதாக கடந்த மார்ச் 4ம் தேதி டிரம்ப் அறிவித்தார்.
இது குறித்து அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கும் இந்தியாவுக்கும் முறைப்படி அறிவிப்பு தர வேண்டும். இந்த அறிவிப்பு கொடுத்த 60 நாட்களுக்கு பின்னர் தான் அதனை அமல்படுத்த முடியும். இந்த நோட்டீசுக்கான காலக்கெடு கடந்த 3ம் தேதியுடன் முடிந்தது. இதையடுத்து ஜிஎஸ்பி.யில் இருந்து இந்தியா நீக்கப்படுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எந்நேரமும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவை மாற்ற முடியாது என அமெரிக்கா நேற்று தெளிவுப்படுத்தியது.