ஆவடி: விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தாலுக்கா பாசார் கிராமத்தை சேர்ந்தவர் செல்லப்பன் (23). திருவேற்காட்டில் தங்கி லாரி டிரைவராக பணியாற்றினார். இவரது தம்பி செல்லத்துரை (19). ஆவடி சோராஞ்சேரி கிராமத்தில் உள்ள லாரி சர்வீஸ் சென்டரில் ஊழியராக உள்ளார். நேற்று முன்தினம் மதியம் செல்லப்பன் தம்பி செல்லத்துரையை பார்க்க சோராஞ்சேரிக்கு வந்தார். பின்னர் அங்குள்ள பனைமரத்தில் ஏறி நுங்கு பறிக்க முயன்றுள்ளார். அப்போது திடீரென 20 அடி உயரத்தில் இருந்து செல்லப்பன் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த செல்லப்பனை அவரது தம்பி செல்லத்துரை மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே செல்லப்பன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.